கரூர், ஏப்.23: இலவச , கட்டாயகல்வி உரிமை சட்டம் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 30சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படுகிறது.
22ம்தேதி முதல் மே மாதம் 18ம்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு கரூர் முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டகல்வி அலுவலகம், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து இசேவை மையங்கள், கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகமலை, கடவூர் ஆகிய ஒன்றியங்களில் அமைந்துள்ள வட்டாரக்கல்வி அலுவலகங்களில் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.