குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தாம்பரம், ஏப். 23: குடிநீர் வழங்காததை கண்டித்து பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இதில், 39வது வார்டுக்கு உட்பட்ட கக்ளஞ்சாவடி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றி விட்டதால், கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீர் வழங்க வேண்டும் என பலமுறை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, கடந்த 5ம் தேதி அப்பகுதி மக்கள் சார்பில், நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: