நாகர்கோவில், ஏப். 23: கோணம் வாக்கு எண்ணிக்கை மைய ரோட்டில் சந்தேகப்படும் படியாக யாராவது வந்து செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க பைக்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அங்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருப்பதுடன், அறைகளுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இது தவிர 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையும் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. 3 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை ராணுவ படையினர் என 261 பேர் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வேட்பாளர்களின் முகவர்களும் தங்கி உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் வேட்பாளர்களும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறையை கேமரா மூலம் பார்த்துக் கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.