கடையில் பணம் திருடியவர் கைது

திருப்பூர், ஏப்.22: திருப்பூர், குமரானந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்( 35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜலிங்கம் தனது மளிகை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் சிமெண்டு மேற்கூரை உடைந்து கிடந்தது. பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.1,200 காணவில்லை. அதை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.  உடனடியாக மளிகை கடையில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ராஜலிங்கம் பார்த்துள்ளார். அதில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37) என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.  இதுகுறித்து, அவர் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து சந்தோசை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் சந்தோஷ், கடையின் மேற்கூரையை கல்லால் உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, சந்தோசை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: