ஒரத்தநாடு, ஏப். 22: தஞ்சையில் மக்களவை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், குடிநீரின்றி தவிக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை மக்களவை தேர்தல் முடிந்ததையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் 3 சுற்றுகளாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். 25 போலீசார் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு கல்லூரி வளாகத்தில் குடிநீர் வைக்கவில்லை. இதனால் உணவும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பல போலீசார், குடிநீர் இல்லாததால் அவதிப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பார்வையிட வந்த உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நிருபர்களுக்கு குடிநீரின்றி தவிக்கும் அவலத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.