பழநி கடைகளில் தராசில் அரசு முத்திரை உள்ளதா? பொதுமக்கள் கண்காணிக்க வலியுறுத்தல்

பழநி, ஏப்.22: தராசில் அரசு முத்திரை உள்ளதா என்பதை கவனித்து பொருட்கள் வாங்க வேண்டுமென பழநியில் பொதுமக்களிடம் பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. பழநி பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும்போது கண்காணிக்க வேண்டியவை தொடர்பான கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. பழநி வட்டார நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி பழனிச்சாமி உள்ளிட்டோர் விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர். நோட்டீசில் கடையில் உள்ள தராசு அரசால் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மின்னணு தராசு என்றால் எடை காட்டும் இன்டிகேட்டர் பூஜ்ஜியத்தில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேஜைத் தராசு, விட்டத்தராசு என்றால் 2 தட்டுகளும் சமமாக உள்ளதா என்பதையும், தராசுகளுக்கு கீழே ரப்பர் பேண்ட் அல்லது கயிறு வைத்துக் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இரும்பு எடைகற்களின் அடிப்பாகம் தேய்க்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். துணிக்கடைகளில் பயன்படுத்தும் மீட்டர் ஸ்கேலின் இருபக்க முனைகளிலும் அம்புக்குறிகள் முழுமையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும்போது தயாரித்தவர், பேக்கிங் செய்தவர், இறக்குமதியாளர் பெயர் மற்றும் முழு முகவரி உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

பொருளின் எடை, அளவு மற்றும் எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளவாறு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பேக் செய்யப்பட்ட மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை பார்க்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விலையை (வரிகள் உட்பட) கவனித்து வாங்க வேண்டும். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நிகர எடையை விட குறைவாக இருந்தாலோ, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தாலோ புகார் செய்யலாமென நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: