திண்டுக்கல், ஏப்.22: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியையிடம் மர்மநபர்கள் ஏழரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். ராணுவ வீரர் வீட்டில் பீரோவை உடைத்து திருட முயன்றனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகரை சேர்ந்த பேட்டரிக் மனைவி அமலா(40). அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது இவரின் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த திருடன், இவர் கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர் தப்பிச் சென்றார்.