கும்மிடிப்பூண்டி, ஏப்.19: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை ஒட்டி தனியார் இரும்பு தொழிற்சாலை இயங்கியது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை துகள் மற்றும் கழிவுநீரால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வேர்க்கடலை, கம்பு உள்ளிட்ட உணவு பயிர்கள் பாதிக்கப்பட்டது. மேலும், நிலத்தடி நீர் மாசடைந்தது. அப்பகுதியினர் நுரையீரல், மூச்சுத்திணறல் என பல்வேறு பிரச்னைகளால் கடும் அவதியடைந்தனர்.இதனால் கடந்த 3 வருடங்களுக்கு முன் இரும்பு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெயர்மாற்றம் செய்து அதே தொழிற்சாலையை இயக்கும் பணி துவங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டம் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.