சேதுபாவாசத்திரம், ஏப்.18: கஜா புயலால் சேதமான விசைப்படகுகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்காததால் மல்லிப்பட்டினம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடைக்காலத்தில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் படகுகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் 188 விசைப்படகுகள் முற்றிலும் சேதடைந்தது. 54 படகுகள் பகுதி சேதமடைந்தன.5 மாதங்களை கடந்தும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 134 படகுகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மட்டும் குறைந்த அளவு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவந்தன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன் இனப்பெருக்க காலம் என கூறி விசைப்படகுகளுக்கு தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் படகுகள் இல்லாமல் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுவது பரிதாபமாக உள்ளது. நிவாரணத்தை உடனடியாக வழங்கி இருந்தால் படகுகளை தயார் செய்து கடலுக்கு தொழிலுக்கு சென்றிருப்போம் அரசின் மெத்தனபோக்கால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என மீனவர்கள் கவலையோடு கூறுகின்றனர்.