பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மி்ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது

தஞ்சாவூர், ஏப்.18: தஞ்சை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள 5,722 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்மன்ற தொகுதிகள் உள்ளன. அதேபோல் தஞ்சை சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. தஞ்சை நாடாளுமன்ற மற்றும் தஞ்சை சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 1,691 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 5 ஆயிரத்து 722 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 ஆயிரத்து 662 கட்டுப்பாட்டு கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் (விவிபேட்) இயந்திரம் 4,005 ஆகியவை தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து 200 வாகனங்களில் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன. இந்த இயந்திரங்களுடன், வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் அடையாள மை, எழுது பொருட்கள், வாக்காளர்கள் அடங்கிய பட்டியல் உள்ளிட்ட 22 வகையான பொருட்களும் 5 கவர்களில் வைத்து பின்னர் அதை மூட்டையாக கட்டி அனுப்பப்பட்டன.

இந்த மையங்களில் 11 ஆயிரத்து 600 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றி மறைத்து வைப்பதற்கான அட்டைப்பெட்டி ஆகியவையும் கொண்டு செல்லப்பட்டன. வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல்படையினரும் சென்றனர். நேற்று மதியம் 12 மணி முதல் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு

இதுகுறித்து ஆர்டிஓ சுரேஷ் கூறியதாவது: தஞ்சை சட்டசபை தொகுதியில் 89 இடங்களில் 286 வாக்குப்பதிவு மைமயங்கள் அமைகிறது. 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 48 வாகனங்களில் 396 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துசெல்லப்படுகிறது. தஞ்சை சட்டசபை தொகுதியில் 15 பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் அச்சமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் துணை ராணுவத்தினர், அடுத்து உள்ளூர் போலீசார், அடுத்து ஊர்க்காவல் படை என்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் தவிர ஒரிசா மாநில சிறப்பு ஆயுதப்படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தஞ்சை வந்துள்ளார்கள் என்றார்.

Related Stories: