தேர்தல் விதிமீறல் அதிமுக கட்சி கொடிகளை அறுத்தெறிந்த போலீசார்

கும்பகோணம், ஏப்.18: கும்பகோணத்தில் சாலையின் குறுக்கே தேர்தல் விதிகளை மீறி கட்டியிருந்த அதிமுக கொடிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் திமுகவினர் சாலைமறியல் நடத்த முயன்றனர். இதையடுத்து போலீசார் அதிமுக கட்சி கொடிகளை அறுத்தெறிந்தனர்.

கும்பகோணம் உப்புக்காரத்தெருவில் கடந்த மூன்று நாட்களாக அதிமுக கூட்டணி கட்சி கொடிகள் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது. இதனால் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக திமுக நகர செயலாளர் தமிழழகன் நேற்றுமுன்தினம் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் அதிகாரிகள் கொடிகளை அகற்றாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் இன்று தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கும்பகோணத்தில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், ஆத்திரமடைந்த திமுகவினர் நகர செயலாளர் தமிழழகன் தலைமையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த மேற்கு இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் அதிமுக கூட்டணி கட்சிகளின் கொடிகளை அறுத்தெறி–்ந்து பறிமுதல் செய்தனர். இதனால் திமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.இந்த சம்பவத்தால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: