பரமக்குடி, ஏப்.18: மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கிய கருவேல மரங்களை அழிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் விவசாய நிலங்களை வீட்டுமனைக்கு விற்பனை செய்வதை தவிர வேறுவழியில்லை என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக வறண்ட நிலையில் காணப்படுகிறது. நெல், கம்பு, சேளம், கேழ்வரகு, சாமை உள்ளிட்ட பல பயிர்கள் முழுவதும் மழையை நம்பியே பயிரிடப்படுகிறது. கிடைக்கும் குறைந்த அளவு மழையை சேமிப்பதற்குறிய கண்மாய்கள், வரத்து கால்வாய், ஊரணிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து வைகை நீர்த்தேக்கங்களும் கருவேல் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்களை சில காலகெடுவுக்குள் அழிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதின் அடிப்படையில் வேகமாக கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
ஆனால் அதற்கு இடைக்கால தடை பெற்றதால், கருவேல மரங்களை அகற்றும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்கள், விவசாய நிலங்கள், கண்மாய் கரையோரங்கள் என எங்கு பார்த்தாலும் கருவேல மரங்கள் மீண்டும் செளிப்பாக வளர்ந்து காட்சியளிக்கிறது. இந்த மரங்கள் பருவ மழை காலங்களில் பெய்கிற குறைந்த அளவு மழைநீரை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. உலக வெப்ப மயமாதலை தடுக்க மரங்கள் நடுங்கள் என விழிப்புணர்வு பிரசாரங்கள் உலகமெங்கும் நடைபெற்று வரும் காலத்தில், இதுபோல் மணிதவளம், விவசாயம், கால்நடைகள், பறவைகளுக்கு பாதிப்பான கருவேல மரங்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.அண்டை மாநிலங்கள் முழு ஈடுபாட்டுடன் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு கருவேல மரங்களை அழிக்க முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவேல மரங்களை அழிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிட்டு விட்டது. இதற்கு, மாவட்டத்தில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் கருவேல மரங்களே சாட்சியாகும்.