டாஸ்மாக் தொடர் விடுமுறையால் ஒரே நாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு, ஏப். 17: தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் ஈரோட்டில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில், 106 டாஸ்மாக் கடைகளில் கடைகளுடன் இணைந்த பார்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் தினமும் 3.50 கோடி முதல் 4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இருக்கும். பண்டிகை காலங்களில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை செய்யப்படும். மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும், பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கும் மது சப்ளை செய்வதால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மதுபானம் தரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. தேர்தலையொட்டி நேற்று (16ம் தேதி) முதல் 18ம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர்.

தேர்தல் நாளில் வாக்காளர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் மது சப்ளை செய்வதற்காக ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் மதுபானங்களை வாங்கி குவித்துள்ளனர். மேலும், 3 நாட்களுக்கு சரக்கு கிடைக்காமல் குடிமகன்கள் தவிப்பதை தடுக்க சட்ட விரோதமாக பெட்டிகடை, ஓட்டல், பஞ்சாபி ஓட்டல்களில் மதுபானங்களை பதுக்கி வைத்துள்ளனர். வழக்கமாக 3.50 கோடியில் இருந்து 4 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை  இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இதுவழக்கத்தை விட 2.57 கோடி ரூபாய் அதிகம். இதுகுறித்து தேர்தல் ஆணையமும், மாவட்ட போலீசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: