புதுக்கோட்டை, ஏப்.17: திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று மாலை புதுக்கோட்டை நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இறுதியாக அண்ணா சிலை பகுதியில் தனது வாக்கு பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது திருநாவுக்கரசர் பேசியதாவது: கடந்த 20 நாட்களாக கூட்டணி கட்சியினர் தாங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளராக கருதி சங்கடமின்றி, மனப்பூர்வமாக பணியாற்றினர். அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பெட்டியை அனுப்பி வைக்கும்போதும், மே 23ம் தேதி நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவிக்கும் வரையிலும் செயல்படும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகள் என்னை தாய்போல் மடியில் தாங்கியவர்கள் புதுக்கோட்டை மக்கள். பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கட்சி எல்லை, சாதி, மதங்களை கடந்து உங்களையே சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். திருச்சி தொகுதியில் போட்டியிடுவோரில் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டு அகில இந்திய தலைவர்களோடு பழகிய நான் போட்டியிடுகிறேன். மற்றொரு பக்கம் தர்மபுரியில் இருந்து வந்து போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றால் என்ன சாதிக்கப்போகிறார்? அவர் மத்தியில் அமைச்சராக போகிறாரா? அல்லது விஜயகாந்த் பிரதமராக போகிறாரா? எதுவும் நடக்கப்போவதில்லை.