ஈரோடு, ஏப். 16: ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிக்காக பாறைகளுக்கு வைத்த வெடியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு ஓடுகள் உடைந்து சேதமாகின. இதற்கு இழப்பீடு தராவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்என் புதூரில் இருந்து சித்தோட்டிற்கு ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்திற்காக ஆர்என் புதூரில் இருந்து ஜவுளி நகர், சிஎம் நகர் வழியாக குழாய் பதிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பாறைகள் நிறைந்த பகுதிகளில் வெடி வைத்து குழாய்கள் பதிக்கப்பட்டது. பாறைகளுக்கு வைத்த வெடியால் அருகில் இருந்த ஏராளமான குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டு ஓடுகள் உடைந்து சேதமானது.