புதுக்கோட்டை,ஏப்.16: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இதுவரை தபால் வாக்கும் கொடுக்கவில்லை. இதனால் இவர்கள் தேர்தல் நாள் அன்று வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் 17வது பொதுத்தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள், உள்ளாட்சிதுறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள், அலுவலர்கள், போலீசார் உள்ளிட்ட பல அரசு துறையை சேர்ந்தவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தேர்தல் நாள் அன்று வாக்களிக்க முடியாது என்பதால் அஞ்சல் ஓட்டு முறை செயல்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தி போலீசார் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபடுவோர்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் நாள் என்று விடுமுறை என்பதால் தேர்தல் பணியில் ஈடுபடுதாக அரசு துறை அலுவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் எந்த பிரச்னையும் இன்றி வாக்களிப்பார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தீயணைப்பு வீரர்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இலுப்பூர், கீரனூர், ஆலங்குடி, சிப்காட், அறந்தாங்கி, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. இதில் 180க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இதுவரை அஞ்சல் முறையில் வாக்களிக்க படிவம் 12 வழங்கவில்லை.