மதுரை, ஏப். 16: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளையும், அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஏப்.19ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த திருவிழாக்களை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருப்பதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறுகையில், ‘மீனாட்சி திருக்கல்யாணத்தை காணவரும் பக்தர்கள் வசதிக்காக சித்திரை வீதிகள், மாசிவீதிகள் உள்ளிட்ட வீதிகளில் 18 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 32 தற்காலிக கழிப்பறைகள், 30 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 132 துப்புரவு தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகராட்சி எல்லையான கடச்சனேந்தல் தொடங்கி வண்டியூர் வரை 78 இடங்களில் குடிநீர் ெதாட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 58 கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.