செங்கல்பட்டு, ஏப்.14: காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். சிங்கபெருமாள்கோவில், பரனூர், கருநிலம், வீராபுரம், அஞ்சூர், தென்மேல்பாக்கம் உள்பட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி சார்பில் திமுக வேட்பாளர் செல்வத்துக்கு கிரீடம் அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிரசாரத்தின்போது, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பேசுகையில், சென்னையின் நுழைவாயிலாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சிங்கபெருமாள்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை சட்டமன்றத்தில் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சி அமைந்ததும் மு.க.ஸ்டாலின், பாலத்தை திறந்து வைப்பார். இதன்மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எனவே, காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் செல்வத்துக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்’’ என்றார்.