கருங்கல், ஏப்.14 : கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கருங்கல் காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் இருந்து நேற்று காலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை தேர்தலில் பாஜவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கின்ற நேரத்தில் மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்டு பேசி மத்திய அரசை எதிர்த்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, அவரால் பதவி பெற்றவர்கள் இன்று பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது எப்படி நியாயம் என்று அதிமுக தொண்டர்கள் கேட்கின்றனர். அந்த கூட்டணி பொருந்தாத கூட்டணி.
உண்மையான அதிமுக தோழர்கள் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தம்பித்துரை பாராளுமன்றத்தில் மத்திய அரசை பார்த்து ₹15 லட்சம் வங்கியில் ஏன் செலுத்தவில்லை, ஆண்டு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றீர்களே ஏன் தரவில்லை, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஏன் செய்யவில்லை, என்று கேட்டார். அதையும் மீறி முதல்வர், துணை முதல்வர் பாஜவுடன் கூட்டணி சேருகிறார்கள் என்றால் அது பொருந்தாத கூட்டணி. இன்று அந்த கூட்டணி களத்தில் உள்ளது.