கரூர், ஏப். 12: கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று கூறினார்.கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கரூர் மற்றும் இனாம் கரூர் பகுதிகளில் வாக்குசேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருக்கு ஆதரவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஓட்டுசேகரித்தார்.அமைச்சர் பேசியது: கரூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ராமானுஜம் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்பணி முடிந்ததும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காவிரி குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கரூர் ஜங்ஷனில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரையிலும் ரிங் ரோடு அமைக்க பணிகள் துவக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பெருமுயற்சி மேற்கொண்டு நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூ.22 கோடி மதிப்பீட்டில் அமையும் இந்த ரிங் ரோடானது 40 அடி அகலத்தில் அமையும். காமராஜ் நகர், வையாபுரிநகர், செங்குந்தபுரம் சாலைகளும் இந்த சாலையோடு இணைக்கப்படும். இதனால் எளிதில் சென்று வரலாம்.