அணைக்கட்டு, ஏப். 11: கணியம்பாடி அருகே நாகநதியின் குறுக்கே தரமற்ற முறையில் பாலம் கட்டுவதாக கூறி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நாகநதியின் குறுக்கே பாலம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது கிராமமக்கள் நதியை கடக்க முடியாமல் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிசெல்லும் நிலை இருந்து வருகிறது. எனவே, நாகதியின் குறுகே பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் நாகநதியில் பாலம் கட்ட கடந்த ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 25ம் தேதி பாலம் கட்டும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். டெண்டர் விடப்பட்டு 1 மாதத்திற்கும் மேலாக தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்கள் கம்பிகளே இல்லாமல் கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.