திருச்சி, ஏப்.10: திருச்சி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படவுள்ளது என்பது தொடர்பாக, அனைத்து வேட்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார் ஆகியோர் முன்னிலையிலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சிவராசு தலைமையில் 2ம் கட்ட கணினி முறையில் குலுக்கள் தேர்தல் பிரிவில் நேற்று நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை(தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,660 வாக்குச்சாவடி மையங்களுக்கு 3,993 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2,034 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவிகளும், தாம் வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் (விவிபேட்) இரண்டாம் கட்ட கனிணி முறையில் குலுக்கல் நடைபெற்றது. எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு அனுப்புவது தொடர்பாக நேற்று கணினி முறையில் குலுக்கல் நடைபெற்றது. அதன்படி அந்தந்த வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும்.