பாடாலூர்,ஏப். 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பகுதியில் நூதன முறையில் மர்மநபர் மோசடியில் ஈடுபட்டதால் பொதுமக்களும், வணிகர்களும் அச்சத்தில் உள்ளனர். ஆலத்தூர் தாலுகா பாடலூர் ரைஸ்மில் தெருவில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்ற மர்ம நபர் தங்கள் வீட்டில் விசேஷம் வைத்து இருப்பதாகவும், மளிகை பொருட்கள் வேண்டும் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மளிகை பொருட்கள் வேண்டும் எனக்கூறி ஆர்டர் கொடுத்தார். கடை உரிமையாளர் பொருட்களை கடையில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கடையின் கல்லாவில் இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, மளிகைப் பொருள்களை பார்சல் செய்து எடுத்து வையுங்கள் ஆட்டோ எடுத்து வந்து வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டு நைசாக நழுவினார். பின்னர் அங்கிருந்து சென்ற மர்ம நபர் கடைவீதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்று அங்கும் அதேபோல் மளிகை பொருட்களை ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் கல்லாவில் வைத்திருந்த ரூ.4,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு பொருட்களை கொண்டு செல்ல ஆட்டோ எடுத்து வருகிறேன் எனக்கூறி நைசாக நழுவி சென்று விட்டான். பின்னர் இந்திரா நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த ரமேஷ் வீட்டுக்கு சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த மனைவி மஞ்சுளாவிடம் சிமெண்டு மூட்டை வந்துள்ளது. அதற்காக உங்கள் கணவர் ரூ.4 ஆயிரம் பணம் வாங்கிக்க சொன்னார் என்று சொல்லி பணத்தை பெற்றுக் கொண்டு நழுவிச் சென்றான். அதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மசூதிக்கு சென்ற மர்ம நபர் அங்கு இருந்தவரிடம் ரூ.2000 பணம் கொடுத்து சிறப்பு தொழுகை நடத்துங்கள் என்று கூறிவிட்டு நைசாக பேசி அங்கு அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு நைசாக நழுவி தான் வந்த பைக்கில் சென்று விட்டான்.