வேலூர், ஏப்.10: காட்பாடி பாறைமேடு பகுதியை சேர்ந்தவர் சுகன்(27). இவர் டிராவல்ஸ் கடையில் ஊழியராக உள்ளார். கடந்த 4ம்தேதி திருவலம் சாலையில் காரை நிறுத்திவிட்டு அதில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த 2 பேர், சுகனை காரில் இருந்து வெளியே இறக்கி, சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து பணம் ₹12,500ஐ பறிக்க முயற்சித்தனர். இதனை சுகன் தடுத்துள்ளார். அப்போது இருவரும் கத்தியை காட்டி, ‘நாங்கள்தான் சீனிவாசன், பலராமன், ரவுடி ஜானியின் கூட்டாளிகள். இந்த ஏரியாவில் நாங்க பெரிய ரவுடிகள்’ எனக்கூறி மிரட்டியுள்ளனர். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் சோடா பாட்டிலை எடுத்து தரையில் உடைத்தும், ₹40 ஆயிரம் மதிப்புள்ள கார் கண்ணாடியையும் உடைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.