வேதாரண்யம், ஏப்.9: தமிழக தேர்தலில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி வகுப்பினை அந்ததந்த ஒன்றியங்களிலேயே நடத்த வேண்டும் என தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலை கழக கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியில் நாகை மக்களவை தொகுதியில் தேர்தல் அலுவலர்களாக பணியாற்ற உள்ள நாகை, கீவளூர், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, வேதாரண்யம் பகுதிகளை சேர்ந்த 1194 ஆசிரியர், ஆசிரியர்கள் பயிற்சிக்கு வந்திருந்தனர். மயிலாடுதுறை சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட நீண்ட தொலைவிலிருந்து வேதாரண்யம் வருவதற்கு குறைந்த பட்சம் 100 முதல் 120கி.மீ வரை பேருந்தில் 4முதல் 5மணி நேரம் பயணித்து வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வேதாரண்யத்திற்கு பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பயண களைப்பு ஏற்படுவதுடன் மன சோர்வும், காலவிரையமும் ஏற்படுகிறது. இதனால் சில மணிநேரம் நடைபெறும் தேர்தல் பயிற்சிக்கு நீண்ட தூரம் பயணித்து வரவேண்ய சூழ்நிலை உள்ளது. தேர்தல் பயிற்சி என்பது ஒரே மாதிரியாகத்தான் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.