தா.பேட்டை.ஏப்.5: தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், தா.பேட்டை ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவிக்கசெய்து வளமிக்க பகுதியாக மாற்றுவேன் என்று உறுதியளித்தார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தா.பேட்டை அடுத்துள்ள பாப்பாபட்டியில் நேற்று காலை தனது பிரச்சாரத்தை பாரிவேந்தர் துவக்கினார். திருச்சி வடக்கு மாவட்டதிமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பிரசார பயணத்தை துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து பாப்பாபட்டி, சேருகுடி, சூரம்பட்டி, தும்பலம், தா.பேட்டை, காருகு, கரிகாலி, மகாதேவி, ஊரக்கரை, முத்தம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாரிவேந்தர் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.