நாட்றம்பள்ளி, ஏப்.3: நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வீட்டு மனை பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தாசில்தார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த இடங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் சப்-கலெக்டர், நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, இதுவரை எந்த அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் லட்சுமிபுரம் கூட்ரோடில் திடீரென அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.