ஈரோடு, மார்ச் 29: தேர்தல் பணிக்கான முதல்கட்ட பயிற்சியில் விடுபட்ட ஆசிரியர்கள் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி வாக்குபதிவு நாளன்று வாக்குசாவடிகளில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் மூன்று கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 2213 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குசாவடிகளில் பணியாற்ற 10 ஆயிரத்து 624 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குசாவடிக்கு தலைமை வாக்குசாவடி அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் என மொத்தம் 5 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முகாம் கடந்த 24ம் தேதி நடந்தது. 2ம் கட்ட பயிற்சி முகாம் அடுத்த மாதம் முதல் வாரத்திலும், 3ம் கட்ட பயிற்சி முகாம் வாக்குபதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவும் நடைபெற உள்ளது.