திருவள்ளூர், மார்ச் 28: ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவந்து திருவள்ளூர் பஸ் மற்றும் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்ற இருவரை காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர் வந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பதாக, காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி ஜுலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் சீதாராமன், எஸ்.ஐ., செல்வம், ஏட்டுக்கள் மீனாட்சிசுந்தரம், சர்தார் ஆகியோர் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்திலும், ரயில் நிலையம் அருகிலும் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.