ராமநாதபுரம், மார்ச் 27: சோற்று கற்றாழையை பயன்படுத்தி கோழிக்கு வெள்ளைக்கழிச்சல் நோயையும், மாடுகளுக்கு மடிவீக்க நோயையும் கட்டுப்படுத்தலாம் என்று கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். பாலைவனத்தின் அல்லி என்று சோற்றுக்கற்றாழை அழைக்கப்படுகிறது. இது ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது. முதிர்ந்த கற்றாழைச்செடி சராசரியாக 36 அங்குலம் நீளமாக வளரக் கூடியது. ஒவ்வொரு செடியிலும் 16 மடல்கள் வரை இருக்கும். சர்வரோக நிவாரணியான இச்செடி கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. ‘‘பல நூறு ஆண்டுகளுக்கு முன்பபே தீக்காயத்திற்கும், நோய்தொற்று தடுப்பிற்கும் கற்றாழை மருந்தாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் உட்பொருளான ஜெல் எனப்படும் கூழ் மருத்துவ குணங்களை கொண்டது. இதை வெளிப்பூச்சாக மட்டுமல்லாமல் உட்கொள்ளவும் பயன்படுத்தலாம்.