கூடுவாஞ்சேரி, மார்ச் 27: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காவல்துறை சார்பில், அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமை தாங்கினார். ஏஎஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுக உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் அழைப்பு விடுத்தனர். அதன்படி, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.அந்தந்த பகுதிகளில் பலவீனமான வாக்காளர்கள் இருந்தால் தேர்தல் அலுவலர் அல்லது காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் பிரசாரம், பொது கூட்டம், ஊர்வலம் மற்றும் இதர அனுமதிக்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் அல்லது விளையாட்டு மைதானத்தையோ அரசியல் கட்சியினர் தேர்தலுக்கு பயன்படுத்த கூடாது. பொது இடங்களில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது.