ராமநாதபுரம், மார்ச் 26: முத்துவயல் கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி கிடப்பதால், மாணவர்கள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கிராமப்புற விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடும் வகையில் சறுக்குகள், சீ ஷா, பார் விளையாட்டு, வாலிபால் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைத்ததோடு சரி, பஞ்சாயத்து நிர்வாகம் பராமரிக்க வில்லை. அதனால் காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்தும், புதர்மண்டியும் கிடக்கிறது. இங்கு விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும், பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள், குழந்தைகளுக்காக விளையாட்டு ஆர்வம் கேள்விக்குறியாகி உள்ளது.