ராமநாதபுரம், மார்ச் 26: சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால், நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தீயனூர், போகலூர், சேமனூர் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள், பிரசவத்திற்காக பெண்கள் தினந்தோறும் அங்கு வருகின்றனர். சுகாதார நிலையத்தில் பல வசதிகள் இருந்தும் முறையான தண்ணீர் வசதி இல்லை. இதனால் அங்கு வரும் நோயாளிகள், பிரசவத்திற்கு வரும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தண்ணீர் வசதி இல்லாததால் சுகாதார நிலையத்தில் உள்ள செடிகள் அனைத்தும் கருகி வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தினர் சுகாதார நிலையத்தில் அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென்று நோயாளிகள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.