கும்பகோணம், மார்ச் 26: தாராசுரம் அரசு பள்ளி சுவரில் முதல்வர் புகைப்படம் அச்சிட்டிருந்த பேனர் அகற்றப்படாமல் உள்ளது. இதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதில் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை. கட்சி கொடிகள் மற்றும் கொடிகம்பங்களை அகற்ற வேண்டும். தற்போதுள்ள கட்சியினரின் தலைவர்கள் படங்களை அகற்ற வேண்டும். உருவ படங்களை போஸ்டர்களாகவோ, ஸ்டிக்கர்களாகவோ வைக்கக்கூடாது. அதை பேப்பரை ஒட்டி மறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கடுமையான கட்டுப்பாடு விதித்தது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.