சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.39.95 லட்சம் உண்டியல் காணிக்கை

மண்ணச்சநல்லூர், மார்ச் 22: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.39 லட்சத்து 95 ஆயிரத்து  55 ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை மாதமிருமுறை எண்ணப்படுகின்றன.  இந்த மாதத்தில் 2வது முறையாக நேற்று கோயில் உண்டியல்கள் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் காணிக்கைகளை எண்ணி, தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கிட்டனர். இதில் ரொக்கமாக 39 லட்சத்து 95 ஆயிரத்து  55 ரொக்கம், 1 கிலோ 74 கிராம் தங்க நகைகள், 4 கிலோ 36 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 119 ஆகியவை இருந்தன.  இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு.

Related Stories: