அரியலூர், மார்ச் 22: அரியலூர் மாவட்டத்தில் அதிகபாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கனரக வாகனம் இயக்கி வந்த டிரைவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் விபத்துகளை தவிர்க்கும் விதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சாலைகளில் வேகத்தடை, ஒளிரும் வில்லைகள், சிமென்ட் ஆலைகளில் சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எடை ஏற்றப்பட்டு அளவு உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வாகனங்களில் (டிராக்டர், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள்) முன்புறம் மற்றும் பின்புறம் ஒளிரும் ஒட்டுவில்லைகள் அமைத்திருப்பதையும், வழக்கமான வாகன தணிக்கையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது, விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.