திருப்போரூர், மார்ச் 22: திருப்போரூரில் 126 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 126ம் ஆண்டு விழா மற்றும் கல்விச்சீர் திருவிழா நடந்தது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை மேரிஸ்டெல்லா வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி ஆசிரியர்கள் உஷாராணி, வாசுகி, லிவினா எழிலரசி, சோபியாஜெபசீலி, தாசன் ராபின்சன் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், வட்டார வள மேற்பார்வையாளர் திருவருள்செல்வி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சிவராமன், மேலாண்மைக் குழுத்தலைவர் ஆண்டாள், ஆலத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜோசப் உள்பட பலர் கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளியின் பெற்றோர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் ₹1 லட்சம் மதிப்புள்ள பீரோ, தண்ணீர் தொட்டி, லேப்டாப், எழுது பொருட்கள் உள்ளிட்டவை பள்ளிக்கு கல்விச் சீராக வழங்கப்பட்டன. முடிவில் உதவி தலைமையாசிரியை தனபாக்கியம் நன்றி கூறினார்.