சென்னை, மார்ச் 22: மாதவரத்தில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் இருந்து கடத்தப்பட்ட ₹5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை மாதவரத்தில் மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து வந்த கன்டெய்னரில் அதிகாரிகள் சோதனை செய்தபோது 11 டன் செம்மரக்கட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் செம்மரகட்டைகளை பறிமுதல் செய்து லாரி ஓட்டுனரை விசாரித்ததில் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரியவந்தது. மேலும், இவற்றின் மதிப்பு ரூ.20 கோடி. இதற்கிடையே, கடந்த 4ம் தேதி இரவு ஒரு கும்பல் அரசு குடோனில் புகுந்து கன்டெய்னர் பெட்டியை உடைத்து, அதில் பறிமுதல் செய்து வைத்திருந்த பலகோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றது. இதுகுறித்து மாதவரம் போலீசில் கிடங்கு மேலாளர் பிரியா ஜேக்கப் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அக்கிடங்கில் 24 மணி நேரமும் செக்யூரிட்டிகளின் பாதுகாப்பில் இருந்தும், அங்கு கன்டெய்னரில் இருந்து செம்மரக் கட்டைகள் கொள்ளை போனதால், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் துணையுடன் கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.