திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. மேலும், காவடி ஏந்தி பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்து வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்புக்குரியது. அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி, நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறையில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோயில் கொடி மரம் முன், மாலை 5 மணியளவில் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது. பின்னர், கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில், இரவு 11 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.