ராமநாதபுரம், மார்ச் 21: தேவிபட்டிணம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை சுற்றிலும் குப்பைகள் குவிக்கப்படுவதால், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர இரவு நேரங்களில் பலர் மது அருந்தும் பாராக மாற்றி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே தேவிபட்டிணத்தில் பஸ் ஸ்டாண்டு அருகேயும், மீன் கடை பகுதியிலும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையங்களுக்கு அருகில் குப்பைகள் கொட்ட கூடாது என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கன்வாடி மையங்களை சுற்றிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் அங்கு படிக்கும் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். கடந்த பல மாதங்களாக இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் மையத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் குழந்தைகளின் நலன் கருதி குப்பைகளை அகற்றவும், தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகள் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.