சென்னை, மார்ச் 21: வளசரவாக்கம், தேவிகுப்பம் பிரதான சாலை, லட்சுமி நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (58). சாப்ட்வேர் நிறுவன ஊழியர். கடந்த வாரம் பத்மநாபன், குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பினார். அப்போது அவரது வீட்டில் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சக்கரபாணி நகரில் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த சிவராஜன் (எ) ராஜன் (43) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் கூட்டாளி திவாகர் (எ) தருன் (33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.