கோவை, மார்ச் 21: கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் சுப்பையன் வீதியை சேர்ந்தவர் சிவநேசன். பூ அலங்கார பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை 6 மணியளவில் தனது டூவிலரில் கோவை பூமார்க்கெட்டிற்கு பூ வாங்க சென்றார். அவர், கே.கே.புதூர் கணபதி லேஅவுட் பகுதி அருகே வந்த போது திடீரென 2 பேர் அவரை தடுத்து நிறுத்தி, கத்தியை காண்பித்து அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்தனர். சிவநேசன் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள், 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், மதியம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, 2 பேர் போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், நரசிம்மநாயக்கன்பாளையம் சேர்ந்த பிரபாகரன்(21), கே.கே.புதூர் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்(21) என்பதும், இவர்கள் சிவநேசனிடம் கத்தி காண்பித்து பணம் பறித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்தனர்.