கெங்கவல்லி, மார்ச் 21: கெங்கவல்லி அருகே கேஸ் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியதில் நகை, ₹40ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து நாசமானது. வீரகனூர் அருகே லத்துவாடி ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமர். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பாயி(40). இவர்களுக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். செண்பாயி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், கேஸ் அடுப்பில் சமைத்து முடித்து விட்டு, கவனக்குறைவால் சரியாக அணைக்காமல் இருந்துள்ளார். இதனால் கேஸ் கசிந்திருந்த நிலையில், மீண்டும் தோசை ஊற்ற அடுப்பை பற்ற வைத்தபோது தீ பற்றி எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த செண்பாயி வீட்டில் இருந்த குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே ஓடி தப்பினார்.