பெரம்பலூர்,மார்ச் 20: மனு தாக்கலுக்கான முதல் நாள் வேட்பாளர்கள் ஒருவர்கூட வரவில்லை. 11 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 2ம்கட்டமாக ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதனையொட்டி வேட்பு மனுதாக்கல் நேற்று (19ம்தேதி) தொடங்கி வருகிற 26ம்தேதி வரை நடக்கிறது. இதன்படி மனுதாக்கல் செய்ய விரும்புவோர் 19ம்தேதி முதல் 22ம்தேதிவரையும், சனி,ஞாயிறு விடுமுறைக்குப்பிறகு 25,26 தேதிகளிலும், காலை 11மணிமுதல் மாலை 3 மணிவரை மனுதாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுவோர் பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தாவிடம் கலெக்டர் அலுவலக முதல்தளத்திலும், முதன்மை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான (பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி) பெரம்பலூர் வருவாய்கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் பழையபஸ் டாண்டு ஆத்தூர்சாலையிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் என 2இட ங்களில் மட்டுமே மனுதாக்கல் செய்யலாம். இந்நிலையில் மனுதாக்கலுக்கான முதல்நாளான நேற்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சாந்தா, முதன்மை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலரான விஸ்வநாதன் ஆகியோர் காலை 10 மணிக்கே அலுவலகத்திற்கு வந்துவிட்டனர்.