புழல், மார்ச் 20: லாரியில் கடத்தி வரப்பட்ட ₹25 லட்சம் மதிப்பிலான டீத்தூளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர். இது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பொள்ளாச்சியில் தனியார் டீ தூள் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து ₹25 லட்சம் மதிப்பிலான 20 டன் டீ தூள் கொண்டு செல்லப்பட்டது. டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த லாலா பாஷா லாரியை ஓட்டி வந்தார்.குறிப்பிட்ட நாளில் டீ தூள் கம்பெனிக்கு வராததால் டிரைவரின் செல்போனுக்கு கம்பெனியில் இருந்து தொடர்பு கொண்டனர். அப்போது டிரைவர், ‘‘லாரி உரிமையாளர் காண்டீபன் லாரியை நான் எடுத்து செல்கிறேன் என கூறிவிட்டு என்னை மட்டும் செங்குன்றத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்’’ என தெரிவித்துள்ளார். இது அந்த கம்பெனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து கடந்த 23ம் தேதி செங்குன்றம் காவல் நிலையத்தில் டீ தூள் கம்பெனி மேலாளர் ராம்வீர்சிங் புகார் செய்தார். இதன்படி உதவி கமிஷனர் ரவி, செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து லாரி டிரைவர் லாலா பாஷாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர்.