கொடுமுடி, மார்ச் 19: பழனி பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்க கொடுமுடி வழியாக பல்வேறு வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 21ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க பழனி செல்லும் வழியில் நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், பஸ்கள், லாரிகள், கார்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இப்படி வந்திருந்த பக்தர்களில் பழனியை அடுத்த பாப்பம்பட்டி, காவலபட்டி, நெய்காரபட்டி, ஆண்டிப்பட்டி, சின்னகாஞ்சிபுரம், புளியம்பட்டி, ஆகிய ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கொடுமுடிக்கு வர துவங்கிய பக்தர்கள் காவிரியில் நீராடினர். பின்னர் தாங்கள் கொண்டுவந்திருந்த தீர்த்தகலசங்களில் காவிரி தீர்த்தத்தை நிரப்பிக்கொண்டும், காவடியை எடுத்துக்கொண்டும் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோயிலில் வழிபாடு நடத்தினர்.