கிருஷ்ணகிரி, மார்ச் 19: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் கடும் பாதிக்குள்ளாகியுள்ளனர். பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெயிலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் டாக்டர்கள் கூறியதாவது:
கொளுத்தும் வெயிலில் நடக்கும் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் உஷ்ணக்காற்று எளிதாக நோய்கிருமிகளை பரப்பி விடுகிறது. இதே போல், வெயில் காலத்தில் நோய்க்கிருமிகளின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் அதிகமாக சுரக்கும் வியர்வையால் உடலில் உப்புச்சத்து குறைந்து அடிக்கடி மயக்கம் வரும். குடிநீர் தொடர்ச்சியாக வராததால், குழாய்களில் மாசுபடிந்து அதன் மூலம் தலைவலி, வாந்திபேதி, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகமாக வியர்வை சுரப்பதால் ஈரப்பதம் குறைந்து தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் பரவ வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, அம்மை நோய்களான சின்னம்மை, பெரியம்மை, சிக்கன்பாக்ஸ் போன்றவற்றின் தாக்குதல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் அதிகமாக இருக்கும்.