நாகர்கோவில், மார்ச் 19: கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களை இதுவரையிலும் எந்த ஒரு கட்சியும் அதிகாரபூர்வமாக அறிவிக்காததால் தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ஜ. இங்கு போட்டியிடுகிறது. பா.ஜ சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டாலும் இதுவரை வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. இதனை போன்று அம்மா முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ் - பாஜ என்று இருமுனை போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.இந்தநிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னையில் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று விருப்ப மனு அளித்தனர். 2 நாட்களாக விருப்ப மனு பெறப்பட்டதில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு மட்டும் 54 பேர் பணம் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்டமாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதற்காக விருப்ப மனு அளித்தவர்களும் சேர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வக்கீல் ராபர்ட்புரூஸ், ரூபி மனோகரன் உட்பட பலரும் சீட் பெறும் போட்டியில் களத்தில் உள்ளனர். ஓரிரு நாட்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பிரசாரம் செய்து சென்றுவிட்ட நிலையில் அடுத்து 2ம் கட்ட தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிடோர் பிரசாரத்திற்காக வருகை தர இருக்கின்றனர்.