ராமநாதபுரம், மார்ச் 15: ராமநாதபுரத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட பறக்கும் படையினருடன் சோதனை குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கூறுகையில்,ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனைக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை குழுவினர் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது வெளியூர் உள்ளுர் வாகனங்கள், சுற்றுலா செல்பவர்கள் என அறிந்து அதற்கேற்ப வாகன சோதனையில் ஈடுபடவேண்டும். வைத்திருக்கும் பணத்திற்ககு முறையான கணக்கு வைத்திருந்தால், உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். சோதனை என்ற பெயரில் சிரமபடுத்த கூடாது.மாவட்டத்தில் பல பகுதிகள் சுற்றுலா தலமாக உள்ளதால் ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களுக்கு வரும் பக்தர்கள் செலவுக்காக கொண்டு வரும் பணம் தேவையான அளவில் இருக்குமானால் அனுமதிக்கலாம்.அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது ரூ.50 ஆயிரம் வரை வைத்திருக்கலாம். மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேனர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பொருள்களை வைத்திருக்கலாம். அரசியல் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரத்தின் போதும், கட்சியின் பொருளாளரும் ரூ.1 லட்சம் வரையிலும் வைத்திருக்கலாம். வேட்பாளரின் முகவர், கட்சி உறுப்பினர்கள் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே வைத்திருக்கலாம். அனுமதிக்கப்பட்ட தொகைக்கு சம்பந்தப்பட்டோர் கணக்கு காட்டுவதுடன், அதற்கு மேலாக வைத்திருந்தால் உடனடியாக பணம் கைப்பற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.