மணப்பாறை, மார்ச் 14: வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
கி.பி.1020ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப்பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னராக ஆட்சி புரிந்த அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும் பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று சிறப்புமிக்க மாசிப்பெருந்திருவிழா, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலில் கடந்த 6ம் தேதி (புதன்) இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பெரியகாண்டியம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்றுமுன்தினம் (12ம் தேதி) இரவு அண்ணன்மார் தெய்வங்கள் போரிட்டு மாண்ட இடமான படுகளத்தில் உள்ள பொன்னர் - சங்கர் கோயிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் எட்டாம் நாள் முக்கிய நிகழ்வாக வேடபரி நிகழ்ச்சி வீரப்பூர் கன்னிமாரம்மன் வகையறா கோயில் பெரிய காண்டியம்மன் ஆலயத் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.